#chithiraitv #தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் அன்புமணி : ராமதாஸ் பேச்சு

  • 2 years ago
அடுத்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அன்புமணி தலைமையிலான பாமக ஆட்சி அமைய வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் கட்சி நிறுவனர் ராமதாஸ் பேசியுள்ளார்.

திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய சட்டமன்ற தொகுதி பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது-

தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம், நம்மிடம் சக்தி இல்லை, சக்தி இழந்து கிடக்கிறோம், ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் (தொண்டர்கள் ) வற்புறுத்தினீர்கள். இதனால் மாறி, மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்.எல்.ஏ.க்கள், 25 எம்.எல்.ஏ.க்கள், 18 எம்.எல்.ஏ.க்கள், 6 எம்.பி.க்கள், 10 ஆண்டு காலம் 2 மத்திய அமைச்சர்கள் என பா.மா.க.வின் பலம் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது நீங்கள் சொன்னீர்கள் தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என்று. தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் 5 தொகுதியில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

உள்ளூர் புரிதலுக்கு விட்டுக்கொடுப்பது (local understanding ) என தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பா.ம.க.வுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரசாரம், சோசியல் மீடியா மூலமாக பிரசாரம் செய்வது தான்.

கட்சியில் ஒரு சில பகுதிகளில் வேட்பாளரை நிறுத்துவதற்கு கூட ஆள் இல்லை. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் பலம் இழந்து விடுவோம். நம்முடைய பகுதியை மட்டும் சொல்லவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள நிலையைத்தான் சொல்கிறேன்.

ஏன் இந்தப் பின்னடைவு, பா.ம.க. தொண்டர்களின் வீரம், மானம் எங்கே போனது? பா.ம.க.வின் தொண்டனாக எப்போதும் இருப்பேன். உயிரே போனாலும் காசு வாங்க மாட்டேன் என்று இருப்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது. அவர் திறமையானவர். அவரது தலைமையில் பா.ம.க.வின் ஆட்சி அமைய வேண்டும்.

ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். சோசியல் மீடியா கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Recommended