முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்திய ஒரு ஆன்ட்டிக் கலெக்‌ஷன்..! #antiques
  • 3 years ago
Reporter - ஜெ.முருகன்
Camera - அ.குரூஸ்தனம்
"நம் முன்னோர்கள் பயன்படுத்திய அனைத்து வீட்டு உபயோகப் பொருள்களையும் அடுத்த தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம்."
நம் முன்னோர்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி, தற்போது வழக்கொழிந்துவிட்ட அரிய பொருள்களைத் தேடித் தேடி சேகரித்து பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியரான ஐயனார்.
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர்கள் கடைப்பிடித்த வாழ்வியலையும், உணவு முறைகளையும் ஒதுக்கிவிட்டு புதுப்புது நோய்களுடன் நாகரிகச் சமூகமாக வளர்ந்து நிற்கிறோம். வழி வழியாக அவர்கள் கையாண்டு வந்த தமிழ் மருத்துவ முறைகளை அரைகுறையாக கேள்விப்பட்ட சிலர், பரம்பரை சித்த வைத்தியர்களாக மாறி லாட்ஜ் அறைகளில் லட்சங்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்படித்தான் நமது வீடுகளில் இருந்து பழைய இரும்புக் கடைகளுக்கு தூக்கி வீசப்பட்ட உழக்கு, படி, மாகானி, மரக்கால், செப்புக் குடங்கள், வெண்கல தூக்குகள், உணவருந்தும் தட்டுகள், விளக்குகள் உள்ளிட்டவை ’ஆன்ட்டிக்’ பொருள்கள் என்ற பெயரில் நம்மிடமே விற்கப்படுகின்றன.
இப்படியான சூழலில்தான் தமிழகம் முழுக்க அலைந்து திரிந்து, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்களை சேகரித்து பாரம்பர்யத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 25 வருடங்களாக ஈடுபட்டு வருகிறார் புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியரான ஐயனார். சுமார் 100 வருடங்களைக் கடந்த 1,000-க்கும் மேற்பட்ட பழைமையான கலைப் பொருள்களை லட்சக்கணக்கில் செலவு செய்து வாங்கி பாதுகாத்து வருகிறார். முன்னோர்களின் வாழ்வியல் முறையை தற்போதைய தலைமுறையினர் தெரிந்துகொள்வதற்காக சமீபத்தில் அனைத்து கலைப் பொருள்களையும் அடுக்கி வைத்திருந்தார் ஐயனார்.