டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் ரயில் மறியல்-வீடியோ

  • 6 years ago
காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ, முத்தரசன், ஜி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து மூன்று மாதங்கள் தாமதத்திற்குப் பிறகுதான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. எனவே, சாகுபடிப் பணிகளையும் தாமதமாகத் தொடங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.

பத்து இலட்சம் ஏக்கரில் நடுவை நட்டு, உரம் இட்டு, ஏக்கருக்கு பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து வளர்த்த நெற்பயிர்கள் பொதிப்பருவத்தில் உள்ளன. இன்னும் குறைந்தது இரண்டு முறை தண்ணீர் பாய்ச்சினால்தான் விளைச்சலைக் காண முடியும். தண்ணீர் பாய்ச்சாவிட்டால் அறுவடை என்பது கானல் நீராகும் பயிர்கள் கருகி சாவியாகிப் போகும். தற்போது மேட்டூர் அணையில் 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. அதுவும் குடிநீர்த் தேவைக்கு அவசியம் என்ற நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட்டால்தான் நெற்பயிரைக் காப்பாற்ற முடியும். தமிழக அரசு கோரியபடி 15 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும். அதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. தஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் மதிமுக தொண்டர்களும், ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றுள்ளனர். இதேபோல திருவாரூரில் முத்தரசன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது ரயில் மறியலில் ஈடுபட்ட வைகோ, முத்தரசன் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தண்ணீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு கடமையாற்றாத முதல்வர் பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்தார்.


Cauvery Delta district farmers stage a rail roko protest against the failure of the state and central government to secure water for irrigation as per the SC order from Karnataka.

Recommended