’ஓகி’ மழையால் வேகமாக நிரம்பி வரும் நெல்லை அணைகள்... வெள்ளப்பெருக்கு அபாயம்- வீடியோ

  • 6 years ago

நெல்லை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையினால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துவருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. தென்மாவட்டங்களில் ஓகி புயலால் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தின் பெரிய அணையான பாபநாசம் அணை மொத்தம் 143 அடி உயரம் கொண்டது. நேற்று வியாழன் காலையில் 107.45 அடியாக அணையின் நீர்மட்டம் இருந்தது.

மழை காரணமாக அணைக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வரத்து உள்ளது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 129.10அடியாக ஒரே நாளில் 22 அடி உயர்ந்துள்ளது. 25 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய மழை திருநெல்வேலியில் பெய்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரில் 5 ஆயிரத்து 765 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இன்னொரு முக்கிய அணையான சேர்வலாறு அணையில் நேற்று காலையில் நீர்மட்டம் 121 அடியாக இருந்தது. அணைக்கு 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்மட்டம் 147 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் உயரம் 156 அடியாக இருந்தாலும், அபாயம் கருதி, 147 அடிக்கு பிறகு வரும் மழைநீர் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

பாபநாசத்தில் இருந்து 6 ஆயிரம் கன அடி, சேர்வலாறு அணை நீர் 8 ஆயிரம் கனஅடி, கடனாநதியில் இருந்து வெளியேறும் 8 ஆயிரம் கனஅடி நீர், மழை நீர் என மொத்தம் 25 ஆயிரம் கனஅடி நீர் தாமிரபரணியில் வெளியேறுவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.


Water Reservoir Dams in Nellai districts getting filled up fastly due to Heavy rain .

Recommended